வரும் 30ம் தேதி முதல் மதுரை - செங்கோட்டை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தென்னக ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுரை - செங்கோட்டை இடையே ஆகஸ்ட் 30ம் தேதி முதல் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி...
more... வண்டி எண் 06504 மதுரை - செங்கோட்டை விரைவு சிறப்பு ரயில் மதுரையிலிருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு 10:35 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06503 செங்கோட்டை - மதுரை விரைவு சிறப்பு ரயில் செங்கோட்டையிலிருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு இரவு 7.10 மணிக்கு மதுரை வந்து சேரும்.
இந்த ரயில்களில் 12 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் 2 சரக்கு மற்றும் காப்பாளர் பெட்டிகள் இணைக்கப்படும். இந்த தினசரி சிறப்பு ரயில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, வில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பு கோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையத்தில் நின்று செல்லும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டண உயர்வுக்காக சிறப்பு ரயில் என மாற்றம்
ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயிலானது தற்போது சிறப்பு ரயில் என்ற பெயரில் இயக்கப்படுகிறது. மதுரை - செங்கோட்டை வழித்தடத்தில் நாள் ஒன்றுக்கு ஆறு முறை, அதாவது செங்கோட்டை நோக்கி மூன்று ரயில்களும், மதுரை நோக்கி மூன்று ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா காலத்தை முன்னிட்டு பயணிகள் ரயில் அனைத்தும் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது முதன்முறையாக செங்கோட்டை - மதுரை வழித்தடத்தில் ஒரே ஒரு பயணிகள் ரயில் சிறப்பு ரயில் என்ற பெயரில் இயக்கப்படுகிறது. இவ்வாறு பெயர் மாற்றப்பட்டதற்கான காரணம் கட்டணம் உயர்வு என்று கூறப்படுகிறது. உதாரணமாக தென்காசியில் இருந்து மதுரைக்கு 35 ரூபாய் கட்டணத்தில் பயணிகள் ரயிலில் பயணம் செய்து வந்த நிலையில் தற்போது 70 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று மதுரையில் இருந்து திருமங்கலம், திருப்பரங்குன்றம், கள்ளிக்குடி, விருதுநகர் ஆகிய ஊர்களுக்கு ரூ.30 கட்டணமாக உள்ளது. திருத்தங்கல், சிவகாசி ஆகிய ஊர்களுக்கு ரூ.40 கட்டணமாகவும், வில்லிபுத்தூர் ரூ.45, ராஜபாளையம் ரூ.50, சங்கரன்கோவில் ரூ.60, பாம்புக்கோவில் சந்தை, கடையநல்லூர் ஆகிய ஊர்களுக்கு ரூ.65, தென்காசிக்கு ரூ.70, செங்கோட்டைக்கு ரூ.75 என கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வழக்கமாக பயணிகள் ரயிலில் வசூலிக்கப்பட்டதை விட இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அத்துடன் பயணிகள் ரயில் என்று அறிவிக்கப்பட்டால் கட்டண உயர்வு பயணிகள் மத்தியில் அதிர்வலையை மற்றும் எதிர்ப்பை ஏற்படுத்தி விடும் என்ற காரணத்திற்காக சிறப்பு ரயில் என்றும் முன்பதிவில்லாத ரயில் என்றும் வார்த்தைகள் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்பதிவில்லாத ரயில் என்று கூறப்பட்டுள்ள நிலையில் அதிகபட்சமாக ஒரு பெட்டியில் எத்தனை பேர் பயணம் செய்யலாம் என்ற வரையறை எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இதனால் படிக்கட்டுகளில் கூட முண்டியடித்து சமூக இடைவெளி இன்றி பயணம் செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே வட்டாரத்தினர் கூறுகையில், 'தற்போதைய சூழலில் இதுபோன்ற ரயில் இயக்கப்படுவது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கட்டண உயர்வு என்பது ஒரு பொருட்டாக இருக்காது. தற்போதைய கட்டணமும் பேருந்துகளில் வசூல் செய்யப்படும் கட்டணத்தை விட குறைவுதான்' என்று தெரிவித்தனர். இதற்கிடையே கட்டணம் இரு மடங்காக உயர்த்த பட்டபோதும் செங்கோட்டை-மதுரை வழித்தடத்தில் பொதிகை, கொல்லம் உள்ளிட்ட விரைவு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது முதல்முறையாக முன்பதிவில்லாத ரயில் இயக்கப்படுவதால் பயணிகள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.